புதுச்சேரியை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை


உள்படம்: உயிரிழந்த விவேகானந்தன்

புதுச்சேரி: புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த விவேகானந்தன் (வயது 57) நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் 9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கருணாஸ்(19) என்ற இளைஞரையும், விவேகானந்தன் (57) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

கடந்த மார்ச் 5-ம் தேதி கைதுசெய்யப்பட்ட இருவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவருமே காலாப்பட்டு மத்திய சிறையில் தற்கொலைமுயற்சிகளில் ஈடுபட்ட வந்த நிலையில் இவர்களை கண்காணிக்கவே தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இருப்பினும் விவேகானந்தன் தொடர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தார், குறிப்பாக சோப்பை சாப்பிடுவது, சட்டையால் கழுத்தை இறுக்கிக் கொள்வது என பல வகைகளில் தொடர்ந்து அவர் தற்கொலைக்கு முயன்று வந்த நிலையில், காவலர்கள் அவரை உரிய நேரத்தில் மீட்டு பாதுகாப்பு அளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை, விவேகானந்தன் சிறையில் உள்ள கழிப்பறையில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் கடந்த மே 6-ம் தேதி 80 சாட்சிகளுடன், 800 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இருவரையும் புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் ஆக. 24-ல்நீதிபதி சுமதி முன்புமுதன்முறையாக ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து வழக்கின் விசாரணை இன்றைய தேதிக்கு (செப். 17) தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று விசாரணையில் ஆஜராகவேண்டிய நிலையில் விவேகானந்தன் நேற்றே தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காலாப்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

x