மின்சாரம் தாக்கி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பலி: மழைக்காக ஒதுங்கிய போது நேர்ந்த துயரம்!


மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பத்குமார்

மழைக்காக கம்பெனி வாசலில் ஒதுங்கிய போது மின்சாரம் தாக்கி திமுக பிரமுகரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சம்பத்குமார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் பாடி யாதவா தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார்(57). சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர் திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

இவரது மனைவி அம்பத்தூர் நகராட்சியில் கவுன்சிலராக பணியாற்றியவர். இந்நிலையில் வழக்கறிஞர் சம்பத்குமார் தினமும் கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிவன் கோயிலைச் சுற்றி நடைபயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இன்று காலை வழக்கம் போல் சம்பத்குமார் அங்கு வந்து நடைபயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென மழை பெய்ததால் கோயில் அருகே உள்ள கம்பெனி வாசலில் மழைக்காக ஒதுங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இரும்பு கதவு மீது கைபட்டு மின்சாரம் தாக்கி சம்பத்குமார் தூக்கி வீசப்பட்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த கொரட்டூர் போலீஸார் சம்பத்குமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவ்விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மழைக்காக சம்பத்குமார் கோயில் அருகே உள்ள கம்பெனி வாசலில் ஓதுங்கிய போது மின்கசிவு காரணமாக இரும்பு கதவில் மின்சாரம் பாய்ந்ததும், அப்போது அவரது உடம்பு இரும்பு கதவில் பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்ததும் தெரிய வந்தது.

திமுக பிரமுகரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சம்பத்குமார் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் உறவினர்கள், திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

x