விழுப்புரம் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் 2,566 வழக்குகளுக்கு ரூ.30.98 கோடி மதிப்பில் தீர்வு!


விழுப்புரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடி ஒருவருக்கு இழப்பீடு தொகைக்கான காசோலையை நீதிபதி பூர்ணிமா வழங்குகிறார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சட்டப் பணி ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான பூர்ணிமா தலைமையில் இன்று மக்கள் நீதிமன்றம் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமாதானமாகவும் விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மற்றும் திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர், வானூர், திருவெண்ணைநல்லூர் மற்றும் விக்கிரவாண்டி ஆகிய நீதிமன்றங்களில் 25 அமர்வுகள் கொண்டு நீதிபதிகள் வழக்குகளை சமரசமாக விசாரணை செய்தனர்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தை விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான பூர்ணிமா தலைமையேற்றார். இந்த மக்கள் நீதிமன்றத்தில் விபத்துக்கள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு வீட்டு வரி மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் எடுத்துக் கொண்டு தீர்வு காணப்பட்டது. இங்கு நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வழிவகை செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணும் வழக்குகளுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்றால் முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்ப பெரும் வாய்ப்பு, வழக்குகள் தீர்வு கண்டதும் அதற்கான தீர்ப்பு நகல் உத்தரவு உடனே வழங்கப்படும், மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது, மக்கள் நீதிமன்றத்தில் வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற வேறுபாடு இருக்காது, மக்கள் நீதிமன்றத்தில் வழக்காளர்களுக்கு செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் அனைத்து விதமான வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது .

இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 5000 மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 2,566-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு ரூ.30,98,20,824 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

இம்மக்கள் நீதிமன்றத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரான மாவட்ட நீதிபதி ரஹ்மான், மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி இளவரசன், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் நீதிமன்ற சிறப்பு மாவட்ட நீதிபதி வெங்கடேசன், எஸ்.சி.,எஸ்.டி. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி, கூடுதல் சார்பு நீதிபதி தமிழ்ச்செல்வன் , முதன்மை சார்பு நீதிபதி (பொ) ஜெயப்பிரகாஷ், போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா, கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜசிம்மவர்மன், சிறப்பு சார்பு நீதிபதி லட்சுமி, மாவட்டஉரிமையியல் நீதிபதி முருகன், நீதித்துறை நடுவர்கள் அகிலா, ராதிகா மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா பதவி உயர்வு பெற்று உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில் நேற்று அவர் பேசியது, முதன்மை மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டு நவம்பர் முதல் 2024, ஜூன் மாதம் முடிய சுமார் 31 ஆயிரம் வழக்குகளுக்கு ரூ.356.91 கோடி மதிப்பீட்டில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டிருக்கின்றன என்றார்.

x