தாய் மற்றும் 3 குழந்தைகளின் உடல்கள் கிணற்றில் சடலமாக மீட்பு: ஜார்க்கண்டில் அதிர்ச்சி சம்பவம்


ஜார்க்கண்ட்: லோஹர்டகா மாவட்டத்தில் கிணற்றில் 26 வயது பெண் மற்றும் அவரது மூன்று குழந்தைகளின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

லோஹர்டகா மாவட்டத்தின் குடுகுடு காவல் நிலையத்திற்குட்பட்ட மக்ரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இன்று மதியம் தமது வயல்களுக்குச் சென்றபோது, ​​கிணற்றில் சடலங்கள் மிதப்பதைக் கண்டு போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் 4 சடலங்களை மீட்டனர்.

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்த தகவல்களின்படி, ‘உஷா முண்டா என்ற பெண், திவ்யா (7), ஷிவம் (4) மற்றும் சத்யம் (1) ஆகிய மூன்று குழந்தைகளுடன் ராஞ்சி மாவட்டத்தில் சோரோ கிராமத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து செவ்வாயன்று வெளியே சென்றுள்ளனர். அதன்பின்னர் உஷா முண்டாவும் அவரது குழந்தைகளும் பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பாததால், அவர்கள் நேற்று முழுவதும் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்த நிலையில் இன்று இவர்களின் சடலம் மீட்கப்பட்டது. உஷா முண்டாவின் கணவர் புல்தேவ் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை அடையாளம் காட்டினார். பின்னர் அவை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன’ எனத் தெரிவித்தனர்

குடும்பப் பிரச்சினை காரணமாக குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு உஷா முண்டா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் போலீஸார், மரணத்திற்கான காரணத்தை அறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x