மதுரையில் மகளிர் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு!


இன்று அதிகாலை மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். 5க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ரா பாளையம் பகுதியில் விசாகா மகளிர் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்வோர் என்று சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி இருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு விடுதி அறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையிலிருந்த துணிகளிலும் பொருட்களிலும் தீப்பிடித்து, பக்கத்து அறைகளுக்கும் தீ பரவியது.

திடீர் தீ விபத்து காரணமாக விடுதியில் தங்கி இருந்த பெண்கள் அலறியடித்தப்படியே வெளியே ஓடி வந்தனர். இருப்பினும் பிரிட்ஜ் வெடித்த அறையில் தங்கியிருந்த பரிமளாசுந்தரி (50), சரண்யா(22) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த திடீர் நகர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். மகளிர் விடுதியில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தீ விபத்தில் காயமடைந்தும், கரும்புகையில் சிக்கி மூச்சுதிணறல் ஏற்பட்டும் 5க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

x