திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்த இளைஞர் - ராணிப்பேட்டை அருகே பரிதாபம்


விரக்தியில் தற்கொலை செய்த இளைஞர்

ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த புளியந்தாங்கல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 32). இவர் நெல்லிக்குப்பம் சிப்காட் பேஸ்-3 உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 7 வருடங்களாக வினோத்தின் திருமணத்திற்காக அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர். இதில் ஜாதகம் எதுவும் சரியாக அமையாததால் இதுவரை திருமணம் நடைபெறவில்லை என்ற விரக்தியில் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வினோத் திடீரென வீட்டில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக வினோத்தை மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, தகவல் அறிந்த சிப்காட் போலீசார் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, வினோத்தின் உடலை பெற்று, அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வினோத்தின் தற்கொலைக்கு காரணம் விரக்தியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,

x