வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள்: அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்


சத்தீஸ்கர்: பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவிகள் பீர் அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலாஸ்பூரின் மஸ்தூரி பகுதியின் பட்சௌரா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 29ம் தேதியன்று இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், சிறுமிகள் பீர் மற்றும் குளிர்பானம் அருந்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று பிலாஸ்பூரின் மாவட்ட கல்வி அதிகாரி டிஆர் சாஹு தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குமூலங்களை நேற்று அந்த குழு பதிவு செய்தது.

வீடியோ எடுக்கும் போது வேடிக்கைக்காக பீர் பாட்டில்களை அசைத்ததாகவும், ஆனால் பீர் அருந்தவில்லை என்றும் மாணவிகள் விசாரணைக் குழுவிடம் தெரிவித்தனர். பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க பள்ளியின் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்” என்றார்.

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, பட்சௌரா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சில பெண்கள் ஜூலை 29 அன்று வகுப்பறையில் தங்கள் வகுப்பு தோழியின் பிறந்தநாளைக் கொண்டாடினர். அப்போது அவர்கள் பீர் குடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் மாணவர் ஒருவர் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

x