அலங்காநல்லூர் அருகே விவசாய கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலம்-குமாரம் செல்லும் சாலையோரத்தில் உள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பதாக அலங்காநல்லூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீஸார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் 1 மணி நேரம் போராடி கயிற்று கட்டிலை கிணற்றில் இறக்கி சடலத்தை மீட்டனர். இதை தொடர்ந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது இளம்பெண் கால்கள் மற்றும் இடுப்பில் கயிறு கட்டப்பட்டிருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அப்பெண்ணின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. அவரை அடையாளம் காண அருகிலுள்ள காவல் நிலையங்களில் காணாமல் போன புகார் ஏதும் உள்ளதா என போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இளம் பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசி சென்றது யார் என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.