சென்னை | உணவு தர மறுத்த ஓட்டல் உரிமையாளர் மகன் மீதுதாக்குதல் நடத்திய இளைஞர்கள் 3 பேர் கைது


கைது செய்யப்பட்ட இளைஞர்கள்.

சென்னை: சென்னை ராமாபுரம், கூத்தப்பேடு பிரதான சாலையில் வசித்து வருபவர் செந்தில்குமார் (47). இவர், அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 7-ம் தேதி இரவு இவரது ஓட்டலுக்கு வந்த 3 பேர் செந்தில்குமாரிடம் சாப்பிடுவதற்கு உணவு கேட்டுள்ளனர். நள்ளிரவு ஆகிவிட்டதால் உணவு அனைத்தும் தீர்ந்துவிட்டதாக செந்தில்குமார் பதில் அளித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் தகராறு செய்துள்ளனர். செந்தில்குமாரின் மகனான மோகன் பிரபு இதை தட்டிக் கேட்டுள்ளார். அவரை 3 பேரும் சேர்ந்து கற்கள், கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தகவல் அறிந்து ராமாபுரம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். காயம் அடைந்த மோகன் பிரபுவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த ராமாபுரம் தீபக் (21), ஆகாஷ் (22), பிரவீன் குமார் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

x