கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 51 சவரன் தங்க நகை, வெள்ளி, பணம் கொள்ளை @ படப்பை


பிரதிநிதித்துவப் படம்

படப்பை: படப்பை அருகே கரசங்கால் கிராமத்தில் வசிக்கும் வளையங்கரணை கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 51 சவரன் நகை 250 கிராம் வெள்ளி, 5 ஆயிரம் பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த கரசங்கால் ரேடியன்ஸ் ஜேட் கார்டன் பகுதியில் வசிப்பவர் சங்கர் (30), சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேமாவதி (28) படப்பை அருகே வலையகரணை கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், சங்கர் கடந்த சனிக்கிழமை அன்று 11.00 மணிக்கு தங்களது வீட்டை பூட்டிவிட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மனைவி ஹேமாவதியுடன் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு மீண்டும் கரசங்காலில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 51 சவரன் தங்க நகை, 250 கிராம் வெள்ளி, 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீஸார் வீட்டில் பதிவான கைரேகை மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் சென்னை பெருநகர காவல் மவுண்ட் உதவி ஆய்வாளர் செபஸ்டியன் தலைமையில் மோப்ப நாய் டைசன் மூலம் சம்பவ இடத்தில் ஆய்வு செய்யப்பட்டதில் சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. இதேபோல் கைரேகை நிபுணருக்கு உதவி ஆய்வாளர் பஷீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் கைரேகைப் பதிவு ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

x