விநாயகர் சிலை கரைப்பின்போது குளத்தில் மூழ்கி சிறுவன் பலி - 4 சிறுவர்கள் மீட்பு; பண்ருட்டியில் அதிர்ச்சி


பண்ருட்டி: பண்ருட்டி அருகே இன்று விநாயகர் சிலை கரைப்பின் போது உடன் சென்ற சிறுவர்கள் 5 பேர் நீரில் மூழ்கியதில் ஆதி கிருஷ்ணன் என்ற சிறுவன் உயிரிழந்தார். 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

விநாயகர் சதுர்த்தி முடிந்து 3ம் நாளான இன்று விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி ஆங்காங்கே நடைபெற்றது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூரை அடுத்த ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள், விநாயகர் சிலையை கரைக்க நேற்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த நத்தம் ராமர் குளத்திற்கு எடுத்துச் சென்று கரைக்க குளத்தில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக 5 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளனர்.

அப்போது அவ்வழியாக சென்றவர்கள், 5 பேரையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மயக்க நிலையில் இருந்த 5 பேரையும் போலீஸார் பரிசோதித்த போது, ஆதி கிருஷ்ணன் (12) என்ற சிறுவன் உயிரிழந்ததாகவும், மற்ற நால்வரும் சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x