மாமனாரை சுட்டுக்கொன்றுவிட்டு மருமகன் தற்கொலை: காங்கேயம் அருகே பரபரப்பு


காங்கயம்: திருப்பூர், மாவட்டம் காங்கயத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த எல்லப்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (70). விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் அம்பிகா. கணவர் ராஜ்குமார். படியூர் அருகே ஹாலோபிளாக் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இதனிடையே கடந்த சில மாதங்களாக பழனிசாமிக்கும், ராஜ்குமாருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இரு குடும்பங்களும் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்தனர். இன்று (செஃப்.9) காலை ராஜ்குமார் பழனிச்சாமி வீட்டிற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு பழனிச்சாமியை ஐந்து தடவை சுட்டுள்ளார்.

இதில் பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ராஜ்குமார், சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றவர் படியூர் பகுதியில் தன்னை தானே நெத்தியில் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார். சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து காங்கேயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x