அதிர வைக்கும் வீடியோ... தண்டவாளத்தில் நின்ற ரயில் பற்றி எரிந்ததால் பரபரப்பு!


தெலங்கானா மாநிலம், காசிபேட் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், ரயில் பெட்டி முற்றிலும் எரிந்து நாசமானது.

தெலங்கானா மாநிலம், காசிபேட் ரயில் நிலையத்தில் பழைய ரயில்வே பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு தண்டவாளத்தில் தனியான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று காலை அந்தப் பகுதியில் புகை வருவதைக் கண்ட ரயில்வே ஊழியர்கள், உடனடியாக விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் பெட்டி ஒன்றில் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக தீயணைப்பான்கள் கொண்டு தீயை அணைக்க பணியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், தீ மளமளவென பரவி, பெட்டி முழுவதும் பற்றி எரியத் துவங்கியது. அருகில் இருந்த குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கும் தீ பரவுவதற்கான அபாயம் இருந்ததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அதற்குள் ஒரு பயணிகள் பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து இந்த தீ விபத்து தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம நபர்கள் யாரேனும் இந்த ரயில் பெட்டியில் தீ வைத்து சென்றார்களா, அல்லது சமூக விரோதிகள் யாரேனும் புகைபிடிக்கும் போது அணைக்காமல் விட்ட சிகரெட்டால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இதையும் வாசிக்கலாமே...

x