ஏர்கன் மூலம் சுட்ட இளைஞர்: நத்தம் அருகே படுகாயத்துடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதி


நத்தம் அருகே சிறுமியை ஏர்கன் எனும் துப்பாக்கியால் சுட்ட செல்லம்.

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இளைஞர் ஒருவர் ஏர்கன் எனும் துப்பாக்கியால் சுட்டதில் 17 வயது சிறுமி காயமடைந்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே துவராபதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வெள்ளமலைப்பட்டியை சேர்ந்த வீரையா மகன் செல்லம் (19). இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று துவராபதியில் நடந்த விசேஷத்திற்கு செல்லம் சென்றுள்ளார். அங்கு சிறுமியை சந்தித்துள்ளார்.

தனது சித்தப்பா அண்ணாமலை வீட்டு அருகே நின்று இருவரும் தனியாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது காதல் ஜோடிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த செல்லம், தனது சித்தப்பா அண்ணாமலை வீட்டிற்குள் சென்று அங்கிருந்த ஏர்கன்னை எடுத்து வந்து சிறுமியின் மார்பில் சுட்டுள்ளார். இதில் சிறுமி படுகாயமடைந்தார்.

சத்தம் கேட்டு வந்து பார்த்தவர்கள் சிறுமியை நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே ஏர்கன்னால் சுட்ட செல்லம், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இவரை நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிகழ்வு குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x