சென்னையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடல்கள் சிதைந்ததால் காகங்கள் கொத்தித் தின்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் கோபிகிருஷ்ணன் (27) இன்ஜினீயரிங் முடித்து விட்டு சென்னை திருவேற்காட்டை அடுத்துள்ள காடுவெட்டி பகுதியில் தனது நண்பருடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதியம் பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருவேற்காடு அடுத்த வெற்றிலைதோட்டம் மேம்பாலத்தில் இவர்கள் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று கோபிகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில், விபத்தில் பலியான பெண் வண்டலூரை சேர்ந்த தமிழ்ச்செல்வி (45) என்பது தெரியவந்தது. ஆனால் அவர், கோபிகிருஷ்ணனிடம் லிப்ட் கேட்டு வந்தாரா அல்லது அவருக்கு தெரிந்தவரா என்பது தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடலை பாகங்கள், தசைகள் சாலைகளில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பிறகு அங்கு சிதறிக் கிடந்த உடல் பாகங்களை காகங்கள் கொத்தித் தின்ற காட்சி அந்த பகுதியில் சென்றவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.