பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை: கட்டை பையில் வைத்து மரத்தில் மாட்டிச் சென்ற கொடூரம்!


செங்கல்பட்டு: பெருந்தண்டலம் கிராமத்தில் பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை மரத்தில் ஒரு பையில் வைத்து மாட்டப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அருகே பெருந்தண்டலம் கிராமத்தில் ஏரிக்கரையில் இன்று மதியம் பெண் ஒருவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அப்பெண் குழந்தையை தேடியுள்ளார். ஏரிக்கரையில் மரத்தில் ரத்த கரையுடன் கட்டை பையில் உயிருடன் பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள்கொடி அகற்றப்படாத நிலையில் ஆண் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே காட்டுத் தீ போல பரவியது. இதனையடுத்து அந்த குழந்தையை பார்க்க ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீஸார் குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்த ஆண் குழந்தைக்கு பச்சிளம் குழந்தைகள் பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?: இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?, குழந்தையை யாராவது கடத்தி வந்து வீசி சென்றார்களா? காதலித்து ஏமாற்றப்பட்ட பெண் வீசி சென்றாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆவதால் பிரசவித்த பெண்கள் யாராவது அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்களா? என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் பெருந்தண்டலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

x