ஆவடி அருகே கடத்தி வரப்பட்ட 100 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது 


ஆவடி: ஆவடி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் காரில் கடத்தி வரப்படுவதாக திருமுல்லைவாயில் போலீஸாருக்கு இன்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆவடியை அடுத்த அயப்பாக்கம், திருவேற்காடு சாலையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த குஜராத் மாநில பதிவெண் கொண்ட காரை மடக்கி போலீஸார் சோதனை செய்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலைப் பொருட்களை பிற மாநிலத்தில் இருந்து காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காருடன் அந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தீபா ராம் (23), மனோகர் லால் (34) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

x