மானாமதுரை அருகே இளைஞரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது


மானாமதுரை: மானாமதுரை அருகே இளைஞரை வெட்டி கொலை செய்த வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசலையைச் சேர்ந்த ராஜா மகன் பிரவீன் (21). கோயம்பத்தூரில் பேக்கரியில் பணிபுரிந்து வந்த அவர் திருவிழாவுக்காக செப்.1-ம் தேதி இரவு சொந்த ஊருக்கு திரும்பினார். மானாமதுரை பேருந்து நிலையத்தில் இறங்கிய அவரை இருசக்கர வாகனங்களில் நண்பர்கள் ஊருக்கு அழைத்துச் சென்றனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து பிரவீனை கடத்திச் சென்றது. அவரது நண்பர்கள் தப்பியோடினர்.

இந்நிலையில் செப்.2-ம் தேதி அதிகாலை தீயனூர் கண்மாயில் பிரவீன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மானாமதுரை போலீஸார் வழக்கு பதிந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்பேரில் டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

விசாரணையில் சங்கமங்கலத்தைச் சேர்ந்த சசிக்குமார் (23), தனுஷ் (21), ரகு என்ற ரகுபதி (19), கிளங்காட்டூரைச் சேர்ந்த அமர்நாத் (23), மானாமதுரை குறிஞ்சி நகரைச் சேர்ந்த சுதர்சன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: “சசிக்குமார் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் வாகனம் நிறுத்துமிடத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை சில மாதங்களுக்கு முன் கீழப்பசலையைச் சேர்ந்த சிலர் வெட்டினர். இதில் அவருக்கு ஒரு கை பறிபோனது. இதனால் ஆத்திரத்தில் இருந்த அவர் பழிதீர்க்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் குற்றவாளிகளுடன் பழக்கத்தில் இருந்த பிரவீனை தனது நண்பர்களுடன் சேர்ந்து சசிக்குமார் வெட்டி கொலை செய்தார்” இவ்வாறு அவர்கள் கூறினார்.

x