இளைஞர் உயிரிழப்பில் மர்மம் - தருமபுரியில் உறவினர்கள் சாலை மறியல்


தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் காவல் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள்.

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலத்தில் இளைஞர் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு வட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த வீரன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனிராஜ். இவரது மகன் பிரபு (25) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் பிரபு மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீஸார் பிரபுவின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள், பிரபுவின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி மகேந்திரமங்கலம் காவல் நிலையம் முன்பு ஓசூர்-தருமபுரி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு டிஎஸ்பி மனோகரன் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

x