கோவையில் கெட்டுப்போன 103 கிலோ மீன்கள் பறிமுதல்


கோவை உக்கடம் மீன் மார்க்கெட் பகுதியில் கெட்டுப்போன மீன்களை பினாயில் ஊற்றி அழிக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

கோவை: கோவையில் மீன் மார்க்கெட் உட்பட 51 கடைகளில் ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறையினர் கெட்டுப்போன 103 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.

கோவை உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் உத்தரவின்படி, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சித் துறை அதிகாரிகள் என 12 பேர் அடங்கிய 6 குழுக்கள் உக்கடம் லாரி பேட்டை பகுதிகளில் உள்ள 35 மொத்த மீன் மார்க்கெட் விற்பனை கடைகளிலும் மற்றும் செல்வபுரம் பை பாஸ் சாலையில் உள்ள உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள 16 கடைகளிலும் மொத்தம் 51 கடைகளில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

கள ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களில் கெட்டுப்போன மீன்கள் மற்றும் பழைய மீன்கள் ஏதேனும் உள்ளதா என கள ஆய்வு செய்யப்பட்டது. இந்த திடீர் கள ஆய்வின் போது மொத்த மீன் விற்பனை கடைகளில் 5 கடைகளில் கெட்டுப்போன நிலையில் இருந்த சுமார் 65 கிலோ அளவிலான மீன்கள் மற்றும் 4 சில்லறை மீன் விற்பனை கடைகளில் சுமார் 38.05 கிலோ கெட்டுப்போன மீன்கள் மொத்தம் 103.5 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

இதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.50,150 ஆகும். கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த சில்லறை மற்றும் மொத்த வியாபார செய்யும் 9 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது.

இது குறித்து ஆட்சியர் கிராந்திகுமார் கூறும்போது, "கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும்" என்று ஆட்சியர் கிராந்திகுமார் கூறினார்.

x