குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாய் உட்பட 2 பேர் கைது - பரமத்திவேலூர் அருகே நடந்தது என்ன?


நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே பெண் குழந்தையைக் கிணற்றில் வீசி கொன்ற தாய் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காந்திபுரத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்தையன் (22). இவரது மனைவி சினேகா (20). மகள் பூவரசி (4). சினேகா தனது மகளுடன் நேற்று முன்தினம் மாலை பரமத்திவேலுார் அருகே சேலூர் செல்லப்பம்பாளையத்தில் உள்ள உறவினர் கோகிலா (40) என்பவர் வீட்டுக்குச் சென்றார்.

இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை பூவரசியை தூக்கிச் சென்ற சினேகா அங்குள்ள கிணற்றில் வீசினார். இதில், குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் பரமத்திவேலூர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, அங்கு வந்த நாமக்கல் டிஎஸ்பி முருகேசன் தலைமையிலான போலீஸார், கிணற்றிலிருந்து குழந்தையின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சினேகாவுக்கு, ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு இடையூறாக இருந்த குழந்தையைக் கொலை செய்ததும், இதற்கு கோகிலா ஆலோசனை வழங்கியதும் தெரிந்தது. இதையடுத்து, சினேகா மற்றும் கோகிலாவை போலீஸார் கைது செய்தனர்.

x