காபியில் சயனைடு கலந்து இளம்பெண் கொலை - உதகையில் நடந்தது என்ன?


ஆஷிகா

உதகை: உதகையில் காபியில் சயனைடு கலந்து கொடுத்து இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர், மாமியார், கணவரின் தம்பி, சயனைடு வாங்கி கொடுத்தவர் என 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பென்னட் மார்க்கெட் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ஜவஹருல்லா (50). இவருடைய மனைவி யாஸ்பின் (47). இவர்களுக்கு இம்ரான் (27), முக்தார் (24) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், உதகை வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த அப்துல் சமது - நிலாபர் நிஷா தம்பதியின் மகளான ஆஷிகா பர்வீன் (22) என்பவரை, இரண்டு ஆண்டுகளாக இம்ரான் காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருவீட்டாரிடம் தெரிவித்துள்ளனர்.

முதலில் எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர், பின்னர் சம்மதித்துள்ளனர். இதையடுத்து, 2021-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி இருவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளனர். அவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இதற்கிடையே மாமியார் யாஸ்பினுக்கும், ஆஷிகா பர்வீனுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் 23-ம் தேதி மர்மமான முறையில் கணவர் வீட்டில் ஆஷிகா பர்வீன் இறந்துகிடந்தார். விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டாலும், அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, அவரது உடலை உதகை மேற்கு போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், அவருக்கு காபியில் சயனைடு விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருப்பதும், வரதட்சனையாக ரூ.20 லட்சம் கேட்டு தராததால் இந்த கொடூர செயலில் இளம் பெண்ணின் மாமியார் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து யாஸ்பின், இம்ரான், முக்தார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நகை கடையில் சயனைடு விஷம் வாங்கி கொடுத்த யாஸ்பினின் குடும்ப நண்பரான உதகையை சேர்ந்த காலிப் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நகைக் கடைகளில் சயனைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த சயனைடு அவ்வளவு எளிதாக வெளியில் யாருக்கும் கிடைக்காது.

இதை சாப்பிட்டால் அடுத்த ஒரு சில நிமிடங்களில் மரணம் ஏற்படும். இப்படிப்பட்ட நிலையில் காலிப்புக்கு சயனைடு கொடுத்தது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பின்னணியில் நகைக்கடை உரிமையாளரும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

x