பொத்தேரி | கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: 3 வடமாநில இளைஞர்கள் சிறையிலடைப்பு


பொத்தேரி: செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக தாம்பரம் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் பொத்தேரியில் தனியார் கல்லூரியைச் சுற்றி நேற்று முன்தினம் அதிகாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் என அனைத்து இடங்களிலும் 168 குழுக்களாகப் பிரிந்து தொடர்ந்து 4 மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த சோதனையில் வடமாநிலத்தை சேர்ந்த தாபா கடை உரிமையாளர்கள் டபிள்ளு (36) சுனில்குமார் (34), மகேஷ்குமார் (33) ஆகியோர் மாணவர்களுக்கு கஞ்சா வாங்கி கொடுத்துள்ளது தெரியவந்தது.

மேலும் ஒரு மாணவி உட்பட 11 மாணவர்கள் ஆங்காங்கே தங்கியிருந்த விடுதி அறைகளிலிருந்து கஞ்சா, கஞ்சா மாத்திரை உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

எனவே, கஞ்சா வாங்கிக் கொடுத்த வழக்கில் தாபா கடை உரிமையாளர்கள் 3 பேர் மற்றும் விடுதி அறைகளில் கஞ்சா பொருட்கள் வைத்திருந்த ஒரு மாணவி மற்றும்10 மாணவர்கள் என 14 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாணவி மற்றும் 10 மாணவர்கள் உட்பட 11 பேரை நீதிமன்ற ஜாமீனில் விடுதலை செய்தார். தாபா கடை உரிமையாளர்களான வட மாநிலத்தை சேர்ந்த 3 பேரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

x