திருமணமான ஒரே மாதத்தில் தாய் வீடு திரும்பிய காயத்ரி... ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை!


உயிரிழந்த கணேசன், விமலா மற்றும் தியா காயத்ரி

கோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் ஜவகர் நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன் (65). இவரது மனைவி விமலா (55). மகள் தியா காயத்ரி (25). ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வரும் மகள் தியா காயத்ரிக்கும், தீட்சித் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐடி கம்பெனிகளில் வேலை செய்வதால் பெங்களூருவில் தனியே வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

திருமணமான ஒரே மாதத்தில் தியா காயத்ரி, தனது கணவரை விட்டு பிரிந்து, பெற்றோரின் வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார். தியா காயத்ரியிடம் இது குறித்து பலமுறை பெற்றோர்கள் கேட்ட போதும், அவர் சரிவர காரணம் கூறவில்லை என தெரிகிறது. இந்நிலையில், தனது கணவர் தீட்சித்திற்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் இருப்பதால், தன்னுடன் குடும்பம் நடத்துவதில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து வந்ததற்கான காரணமாக தியா காயத்ரி தனது பெற்றோர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனால் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால் அவரைப் பிரிந்து பெற்றோரின் வீட்டிற்கு திரும்ப வந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கவுண்டம்பாளையம் போலீஸார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசனும், விமலாவும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சோகத்தில் இருந்து வந்துள்ளனர். கடும் மன உளைச்சலில் 3 பேரும் இருந்து வந்துள்ள நிலையில், நேற்று மாலை விஷம் அருந்திவிட்டு வீட்டிலேயே மூவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

நீண்ட நேரமாக இவர்களது வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கவுண்டம்பாளையம் போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூவரும் சடலமாக கிடந்தது போலீஸாரை அதிர்ச்சியடைய செய்தது.

இதையடுத்து மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x