ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி | மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கொலை வழக்கில் தொடர்புடையவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை கைது செய்து போலீஸார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மீண்டும் மருத்துவமனையில் இன்று (ஆகஸ்டு 31-ம் தேதி) சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

காஞ்சிபுரம், காலண்டர் தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி (62). இவர் கடந்த ஆகஸ்டு 22-ம் தேதி தனது வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார். முதலில் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கொலை என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இந்த வழக்கு விசாரணையில் கஸ்தூரியை காஞ்சிபுரம் மதிமுக மாவட்டச் செயலர் வளையாபதி, மற்றும் பிரபு ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே வளையாபதி கைது செய்யப்பட்ட நிலையில் பிரபுவை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

படுகாயங்களுடன் சிகிச்சை: இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபு படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் வைத்து கைது செய்த போலீஸார் அவரை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் மன்றம் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே சேர்த்தனர்.

கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர் எவ்வாறு காயமடைந்தார் என்பது மர்மமாக உள்ளது. போலீஸார் அவரை ஏற்கனவே கைது செய்து தாக்கியதால் காயமடைந்ததாக கூறி வீடியோவை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருவதால் காஞ்சிபுரம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

x