மகாராஷ்டிராவில் மீண்டும் கொடூரம்: நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கூலித் தொழிலாளி கைது


மும்பை: மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் நான்கரை வயது சிறுமியை, கூலித் தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பால்கர் மாவட்டத்தின் ஜவ்ஹர் தாலுகாவில் கடந்த புதன்கிழமையன்று நான்கரை வயது குழந்தையின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் அக்குழந்தை தனது தாத்தா பாட்டியின் கவனிப்பில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி வீட்டிற்குள் நுழைந்து, அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இதுகுறித்து அந்த சிறுமி அடுத்த நாள் தனது தாயிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 19 வயது குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றவாளி மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 64 மற்றும் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக அமைப்புகள், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

x