புதுச்சேரி: 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை


புதுச்சேரி: 4 வயது குழந்தையை பாலியல் தொல்லை செய்த கூலித் தொழிலாளிக்கு புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது.

புதுச்சேரி வில்லியனூர் பகுதி மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் அய்யனார் (52). தினக்கூலித் தொழிலாளி. கடந்த 2018ம் ஆண்டு பெற்றோர் வேலைக்கு சென்றிருந்ததால், வீட்டில் தனியாக இருந்த 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வீடு திரும்பிய பெற்றோருக்கு இவ்விஷயம் தெரிந்தது. அது குறித்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸார் வழக்குப்பதிந்து அய்யனாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அய்யனார் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சுமதி, குற்றஞ்சாட்டப்பட்ட அய்யனாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

x