பகீர்! பட்டப்பகலில் 12ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை.. 17வயது சிறுவன் வெறிச்செயல்... பதறியோடிய மக்கள்!


மாணவன் படுகொலை

கோவையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில், 17 வயது சிறுவன் ஒருவனை, மற்றொரு சிறுவன் அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரணவ் (17) என்பவர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று காலை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கோவை-அவிநாசி நெடுஞ்சாலையில் ஒண்டிபுதூர் பகுதியில் மருந்து கடை முன்பாக தனது தோழியுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரணவின் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றார். இதில் படுகாயம் அடைந்த மாணவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் படுகொலை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீஸார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே மாணவனை வெட்டி விட்டு தப்பி ஓடிய அந்த மர்ம நபர், சூலூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளரிடம் சரணடைந்துள்ளார்.

சிங்காநல்லூர் காவல் நிலையம்

இதையடுத்து அவரை சூலூர் காவல்துறையினர் சிங்காநல்லூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் பேரரசு (17) என்பதும், சிங்காநல்லூர் டெக்ஸ்டைல் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. எதற்காக இந்தக் கொலை சம்பவம் நடந்தது என்பது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பேரரசு

காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்ததா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே பட்டப்பகலில் மக்கள் நெருக்கடி அதிக மிகுந்த பிரதான சாலையில் நடந்த இந்தக் கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x