செந்துறை அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து - 6,000 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு


அரியலூர்: அரியலூர் அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி உயிர்ழந்தன. விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயராகவன் (34). இவர், பொன்பரப்பி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.35 ஆயிரம் மதிப்பில் 6 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை வளர்ப்பதற்காக வாங்கி, அதற்கான கொட்டகையில் விட்டு வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கோழிக் குஞ்சுகள் இருந்த கொட்டகையில் இன்று (ஆக.28) எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 6 ஆயிரம் கோழிக் குஞ்சுகளும் தீயில் எரிந்து சாம்பலாகின. மேலும், கொட்டகை முழுவதும் சேதமடைந்தன. இது குறித்து தகவலறிந்த செந்துறை தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும், விபத்து குறித்து செந்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x