விருதுநகரில் இதுவரை ஒரு டன் குட்கா பறிமுதல், 238 கடைகளுக்கு சீல், ரூ.60.60 லட்சம் அபராதம்


விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை ஒரு டன் அளவிலான குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 238 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 60.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி விருதுநகர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறையினரும் மற்றும் காவல்த் துறையினரும் இணைந்த 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகிலும் பல்வேறு இடங்களிலும் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை உணவு பாதுகாப்புத் துறையினரும் போலீஸாரும் குழுவாக இணைந்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என 538 முறை சோதனை நடத்தினர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட 238 கடைகள் மற்றும் 23 வாகனங்களில் 1,094 கிலோ 851 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக 238 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ரூ.60.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் 18 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 5 கடைகள் மற்றும் 3 வாகனத்தில் இருந்து 20 கிலோ 125 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக 5 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. 5 கடைகள் மற்றும் 3 வாகனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2-வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு ஒரு மாதம் வரைகடை மூடி சீல் வைக்கப்படும், 3-வது முறையும் தவறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும்.

இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

x