சங்கரன்கோவில் அருகே போலீஸாரை தாக்கிய தந்தை, மகன் கைது


தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஊர் மக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்பவரது மகன் பரத் (25) தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் போலீஸார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தகராறை தடுக்க முயன்றபோது உதவி ஆய்வாளர் சுதாகரின் கையை பரமசிவன், பரத் ஆகியோர் கடித்ததாகவும், இதை தடுக்க வந்த போலீஸ்காரர் லிங்குசாமி, திருமலையை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த உதவி ஆய்வாளர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, பரமசிவன், பரத் ஆகியோரை கைது செய்தனர். பரமசிவன் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

x