நத்தம் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கு: உரிமையாளர், மேலாளர் கைது


ஆலை உரிமையாளர் செல்வம் (இடது), மேலாளர் அருண்பிரசாத் (வலது)

திண்டுக்கல்: நத்தம் அருகே இரண்டு தினங்களுக்கு முன்பாக நடந்த பட்டாசு ஆலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் ஆலை உரிமையாளர் மற்றும் மேலாளர் இன்று (ஆக.27) கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியை சேர்ந்தவர் செல்வம்(49). இவர் ஆவிச்சிபட்டி அருகே பூலாமலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் பட்டாசுகள் தயாரித்து வந்தார். இங்கு அரியலூர் மாவட்டம் மணிமேகலை நகரைச் சேர்ந்த அருண் பிரசாத் (39) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பட்டாசு தயாரிக்கும் இடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிவகாசி அருகே திருத்தங்கலைச் சேர்ந்த கண்ணன் என்ற சின்னன் (42), சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்ற மாசா (30) ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர், மேலாளர் ஆகியோர் தலைமறைவாகினர். நத்தம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடிவந்தனர். இந்நிலையில் உரிமையாளர் செல்வம், மேலாளர் அருண்பிரசாத் ஆகியோரை நத்தம் போலீஸார் இன்று கைது செய்தனர்.

x