அதிர்ச்சி! 7 மாத கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பலி; 3 பேர் கைது


அரியலூர் அருகே 7 மாத கருவை கலைக்க கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி, ரத்தப்போக்கு அதிகரித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் வீரமணி. இவரது மனைவி ரமணா. இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் ரமணா கர்ப்பமானார்.

இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், 3வது குழந்தையை கலைக்க முடிவு செய்தனர். இதனையடுத்து அவர் கருவை கலைக்க மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணி பலி

இதனால் ரமணாவுக்கு அதிகப்படியாக ரத்தப்போக்கு ஏற்பட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். மாத்திரை சாப்பிட்டபின் அவரது கருவில் வளர்ந்த சிசு உயிரிழந்துள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப்பின் அவரது கருவிலிருந்த குழந்தை அகற்றப்பட்டது.

இதனை தொடர்ந்தும் அவருக்கு ரத்தப்போக்கு நிற்காததால், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் கடந்த 2ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து 7 மாத கருவை கலைக்க மாத்திரை கொடுத்த மருத்துவர் தேன்மொழி, சக்தி தேவி, வெற்றி செல்வி ஆகிய மூவரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x