நகை பாலீஷ் போடுவதாகக் கூறி மயக்க மருந்து தூவி பெண்ணிடம் நகை திருட்டு @ ஒரத்தநாடு


தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் ஊராட்சி பொட்டலங்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். பிளம்பரான இவர், நேற்று வேலைக்குச் சென்ற பிறகு, இவரது மனைவி சகுந்தலா தேவி(38) வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில இளைஞர்கள் 2 பேர், சகுந்தலா தேவியிடம் குடிக்க நீர் கேட்டுள்ளனர். பின்னர், நகைகளை பாலீஷ் செய்து தருவதாகக் கூறியுள்ளனர். இதை நம்பி, 2 பவுன் சங்கிலியை சகுந்தலா தேவி அவர்களிடம் கொடுத்துள்ளார்.

அப்போது, நகையை அவர்கள் பாலீஷ் செய்வதுபோல, திடீரென சகுந்தலா தேவியின் முகத்தில் மயக்க மருந்தை பொடியைத் தூவியுள்ளனர். இதில், சகுந்தலா தேவி மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து, 2 பவுன் நகையுடன் இந்த இளைஞர்கள் தப்பிவிட்டனர்.

சிறிது நேரத்துக்குப் பிறகு மயக்கம் தெளிந்து சகுந்தலா தேவி எழுந்தபோது, நகையை திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

x