ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 31 பேர் கைது


ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பொன்னேரி, எண்ணூர், செங்குன்றம், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றச் சம்பவங்களை ஒழிக்கவும், ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அவற்றில் ஒன்றாக, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர், கண்காணிக்கப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், கடந்த ஏப்ரல் மாதம் முத்தாபுதுப்பேட்டையில் உள்ள நகை மற்றும் அடகு கடையில் நடந்த கொள்ளை வழக்கில் கைதான 3 பேர், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய 19 பேர், போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் அடங்குவர் என, குறிப்பிடத்தக்கது.

x