தாம்பரம் | நாய் மீது காரை ஏற்றியதை தட்டி கேட்ட தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்


தாம்பரம்: அனகாபுத்தூர், வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சாலையோரம் படுத்திருந்த நாய் மீது காரை ஏற்றிய நபரை தட்டிக் கேட்ட, தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ் (36). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இம்தியாஸ் தனது வீட்டின் அருகே நின்ற போது, அவ்வழியாக சென்ற கால் டாக்ஸி, தெருவில் படுத்திருந்த நாய் மீது ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர், கால் டாக்ஸி ஓட்டுநரிடம் வண்டியை கவனமாக ஓட்டிச் செல்லக் கூடாதா என கேட்டுள்ளார்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கால் டாக்ஸி ஓட்டுநர், ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில், ஆசிரியருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த சங்கர் நகர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆசிரியர், கால் டாக்ஸி ஓட்டுநரான காட்டாங்குளத்தூர், ஆலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பிரபு (30) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

x