சென்னையில் பெண் காவலரை பிளேடால் வெட்டிய போதை ஆசாமி | கோயில் திருவிழாவில் பரபரப்பு


சென்னை: சென்னை ராயப்பேட்டையில் நடந்த கோயில் திருவிழாவில் பெண் காவலரை பிளேடால் வெட்டிய சம்பவத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ராயப்பேட்டை விஎம் தெருவில் முண்டகக்கண்ணி அம்மன் கோயில் உள்ளது. இன்று நடைபெற்ற இக்கோயிலில் திருவிழாவில் சிலர் மதுபோதையில் தள்ளாடியக் கொண்டிருந்துள்ளனர். அவர்களை கலைந்து செல்லுமாறு, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அறிவுறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மதுபோதை கும்பலில் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் கவுசல்யாவின் வலது கையில் வெட்டியுள்ளார்.

இதையடுத்து, காயமடைந்த பெண் காவலர் கவுசல்யாவை, பணியில் இருந்த மற்ற காவலர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பெண் காவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கையில் 5 தையல்கள் போடப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், மதுபோதையில் தள்ளாடிய ஸ்ரீதர், அஜய், கிஷோர், சசி, சரவணன், மணிகண்டன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், பெண் காவலரை பிளேடால் வெட்டியது அஜய் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x