முகநூலில் சர்ச்சை கருத்து பதிவு: பாடியநல்லூர் ஊராட்சி தலைவரின் கணவர் கைது


நடராஜன்

செங்குன்றம்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகேயுள்ள மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன்(53). பாடியநல்லூர் ஊராட்சியின் முன்னாள் தலைவரான இவர், அதிமுக ஜெயலலிதா பேரவை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், பார்த்திபன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி பாடியநல்லூரில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, கும்பல் ஒன்றால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பாடியநல்லூர், சோலையம்மன் நகரை சேர்ந்த முத்து சரவணன்(35), ஞாயிறு பகுதியைச் சேர்ந்த சண்டே சதீஷ்(32) ஆகிய ரவுடிகள் கடந்த ஆண்டு அக்.12-ம் தேதி சோழவரம் அருகே மாரம்பேடு பகுதியில் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பார்த்திபன் முதலாண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது அண்ணன் நடராஜன் தன் முகநூல் பக்கத்தில், ‘தம்பியின் கொலைக்கு காரணமானவர் வீட்டில் கவுன்ட்டவுன் ஆரம்பம்’ என்ற பொருள் தரக்கூடிய வகையிலான வாசகங்களுடன் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பாக விசாரித்த செங்குன்றம் போலீஸார், பார்த்திபன் கொலை தொடர்பாக முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ், நடராஜன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பார்த்திபனின் அண்ணனும், பாடியநல்லூர் ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமியின் கணவருமான நடராஜனை (58) செங்குன்றம் போலீஸார் கைது செய்தனர்.

x