திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்து 5 பேர் பலி: ஒடிசாவில் துயரம்!


விபத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்.

ஒடிசாவில் திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள சதிகர் சாஹியைச் சேர்ந்தவர் கார்த்திக் பத்ரா. இவரது மகளுக்கும், ஹரிசந்தன்பூர் தொகுதிக்குட்பட்ட மான்பூர் கிராமத்தைச் சேர்ந்த பத்ராவின் மகன் ஹேமந்த் பத்ராவிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை மணமகன் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது டிஜே இசையுடன் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. மணமகளின் வீட்டில் இருந்து சில கி.மீ தொலைவில் கியோஞ்சார் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாயினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x