பள்ளி வேனை மறித்து எல்.கே.ஜி மாணவன் கடத்தல்: சினிமாவை விஞ்சும் சம்பவம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலையில் பள்ளி வேனை ஓவர்டேக் செய்து, இருகார்களில் வந்த மர்மக் கும்பல் எல்.கே.ஜி படிக்கும் மாணவனைக் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குமரி மாவட்டம் பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர் மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பிபின் பிரியன் என்பவரைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் தன் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியா, தன் மகனை அழைத்துக்கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

பிரியா தன் மகனை கடமலைக்குன்று பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி சேர்த்து இருந்தார். பிலாங்காலை பகுதியில் இருந்து சிறுவன் தினமும் ஸ்கூல் வேனில் சென்று கொண்டு இருந்தான். இன்று காலையில் வழக்கம்போல் 9 மணிக்கு ஸ்கூல் வேனில் பிரியா ஏற்றிவிட்டார். வேன் கடமலைக்குன்று நோக்கிச் சென்று கொண்டு இருந்தபோது பின்னாலேயே இரு கார்கள் அதிக ஹார்ன் அடித்த வண்ணம் வந்தது. இதனால் அவசரமாக யாரோ செல்கிறார்கள் என நினைத்து ஸ்கூல் வேன் டிரைவர் இடம்விட்டார்,

ஆனால் ஸ்கூல் வேனை முந்தி காரை நிறுத்திய கும்பல் சர, சரவென வேனுக்குள் ஏறி எல்.கே.ஜி படிக்கும் பிரியாவின் மகனை கடத்திச் சென்றது. அந்த வழியாக வந்தவர்கள் பைக் உள்ளிட்ட தங்கள் வாகனங்களில் துரத்திச் சென்றும் அவர்களைப் பிடிக்க இயலவில்லை. ஒருவேளை பிரியா தன் கணவரைப் பிரிந்து இருப்பதால் அவரோ, அவர் சொல்லி அவரது நண்பர்களோ கடத்தி இருக்கலாமா? என்னும் கோணத்தில் தக்கலை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x