கடலூரில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பழிக்கு பழியாக ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சாந்தி. இவரது கணவர் மதியழகன். மீனவரான இவருக்கும், மதிவாணன் என்பவருக்கும் ஊராட்சி மன்றத் தேர்லில் போட்டியிடுவது தொடர்பாக 2019-ம் ஆண்டிலிருந்தே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த சூழலில், கடந்த 2020-ம் ஆண்டு மதிவாணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இருந்தவர் மதியழகன். இதனால் மதிவாணனின் ஆதரவாளர்கள் மதியழகன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
இந்தநிலையில், மதியழகன் இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம் பிள்ளை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் மதியழகனை ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் மதியழகனின் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மதிவாணனின் ஆதரவாளர்கள்தான் இக்கொலையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பதற்றத்தை தணிக்க கடலூரில் போலீஸார் அதிகம் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.