தேனி அருகே கர்ப்பிணி மனைவி, மகளை கொன்று இளைஞர் தற்கொலை: தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு


தேனி: தேனி அருகே கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை கொன்றுவிட்டு இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி அருகேயுள்ள அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (35). இவரது மனைவி அசிதா(32), மகள் பிரித்விகா (5). அசிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்கள் தேனி அரண்மனைப்புதூர் அருகேயுள்ள முல்லை நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சதீஷ்குமார் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

கடந்த 4 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல்,வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இதில் நஷ்டம்ஏற்பட்டதால், மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், அசிதாவின் தந்தை நாகராஜ் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும், மகள்,மருமகன் ஆகிய இரு வருமே போனை எடுக்கவில்லை. இதனால் நேற்றுஅவர்களது வீட்டுக்குச் சென்றார். வீடு உள்பக்கமாகப் பூட்டி இருந்ததால், அருகில்உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அங்கு அசிதா, பிரித்விகா ஆகியோர் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததும், அருகில் சதீஷ்குமார் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது.

தகவலறிந்து வந்த பழனிசெட்டிபட்டி போலீஸார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனைவி, மகளை வெட்டிக் கொன்றுவிட்டு,சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்,

x