திண்டுக்கல் அருகே நேற்று இரவு தாய் மற்றும் மகள் வெட்டி கொலை செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலனியில் வசித்து வருபவர் அய்யனார். இவரது மனைவி வள்ளியம்மாள்(55). இவர்களது மகள் ராசாத்தி (32). ராசாத்தியின் கணவர் லட்சுமணன் (35) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
லட்சுமணன் அப்பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வள்ளியம்மாள் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர்கள் வள்ளிம்மாளையும், அவரது மகள் ராசாத்தி மற்றும் மருமகன் லட்சுமணன் ஆகியோரை கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
இந்த சம்பவத்தில் வள்ளியம்மாளும், அவரது மகள் ராசாத்தியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லட்சுமணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரட்டைக்கொலை குறித்த தகவலறிந்த தாடிக்கொம்பு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் வந்து விசாரணை நடத்தினர். எதற்காக இந்த கொலைகள் நடந்தது? கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.