ஆபாச வீடியோக்களை காட்டி 6 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: அரசுப்பள்ளி ஆசிரியர் கைது


மகாராஷ்டிரா: அகோலா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், 6 மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை காண்பித்து பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்

மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள 47 வயதான அரசுப் பள்ளி ஆசிரியர் பிரமோத் மனோகர் சர்தார், 6 மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காசிகேட் கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய பிரமோத் மனோகர் சர்தார் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்துப் பேசிய போலீஸ் சூப்பிரண்டு (SP) பச்சன் சிங், "ஆறு பள்ளி மாணவிகளை அவர்களின் ஆசிரியர் பிரமோத் மனோகர் சர்தார் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது தொடர்பாக எங்களுக்கு புகார் வந்தது. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று கூறினார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தானேயில் உள்ள ஆங்கில வழிப் பள்ளியில் துப்புரவுப் பணியாளர் ஒருவரால் நான்கு வயதுச் சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இச்சம்பவம் காரணமாக பெரும் போராட்டங்கள் வெடித்தன. கொதிப்படைந்த மக்கள் நேற்று மும்பை ரயில் பாதையை பத்லாபூர் ரயில் நிலையத்தில் மறித்து ரயில் சேவைகளை ஸ்தம்பிக்க வைத்தனர்.

x