அதிமுக ஆட்சியில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம்: 3 கட்டுமான நிறுவனங்களில் அதிரடி ரெய்டு!


ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகம்

அதிமுக ஆட்சியில் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு 50 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக, 3 கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாக இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெரம்பூரில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பின்னி மில்லுக்குச் சொந்தமான நிலத்தை வாங்கி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை, அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்திற்கு நிலம் வாங்குவது முதல் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி பெறுவது வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னி மில் தலைமை அலுவலகம்

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரத்தில் லேண்ட்மார்க் ஹவுசிங் ப்ராஜெக்ட் சென்னை பிரைவேட் லிமிடெட், கேஎல்பி ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இந்த 3 கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர் பின்னி மில்

அதிமுக ஆட்சியில் எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு 50 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக இந்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னி மில்லுக்குச் சொந்தமான இடம் கைமாறியதில் முறைகேடு செய்யப்பட்டு, லஞ்சம் வழங்கி நிலத்தை பெற்றதாக கட்டுமான நிறுவன இயக்குனர்கள் சுனில் கேட்பாலியா, மணீஷ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

x