திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பிரதிநிதித்துவப் படம்

திருவள்ளூர்: வீட்டின் பூட்டை உடைத்து, 35 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட சமரியாஸ் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணம்மா ராஜ் (65). இவர் ஓய்வு பெற்ற அரசு நிதி உதவிபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர். இவருக்கு மனைவி மற்றும் இருமகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணம்மா ராஜ் தனது இளைய மகன் தினேஷின் திருமண பத்திரிகையை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக குடும்பத்துடன் கடந்த 16ம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்றுள்ளார்.

நேற்று இரவு திருப்பதியில் இருந்து கிருஷ்ணம்மா ராஜ் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 35 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, கிருஷ்ணம்மா ராஜ் அளித்த புகாரின் பேரில், திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

x