ரூ.5.2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் - சென்னையை சேர்ந்த 6 பேர் பெங்களூரில் கைது


சென்னை: துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னை வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த ஒரு பயணியும், அபுதாபியில் இருந்து சென்னை வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த மற்றொரு பயணியும், தங்களுடைய டிக்கெட்களை ரத்து செய்துவிட்டு, துபாய், அபுதாபியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானங்களில் டிக்கெட்களை மாற்றியிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சென்னையைச் சேர்ந்த இரண்டு பயணிகளும், சென்னை வராமல், பெங்களூருக்கு எதற்கு செல்கிறார்கள் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், இருவரும் தங்கம் கடத்தி வருவதும், தகவல் வெளியில் தெரிந்துவிட்டதால், தங்களுடைய டிக்கெட்களை பெங்களூருக்கு மாற்றியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் தனிப்படையினர் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு விரைந்தனர். துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து விமானங்கள் பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்ததும், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த சென்னை பயணிகள் இருவரையும் பிடித்து, அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில், அவர்களது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.5.52 கோடி மதிப்புள்ள 7.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தியதில், துபாய், அபுதாபியில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இவர்கள், தங்கம் கடத்தும் கும்பலுடன் சேர்ந்து குருவிகளாக மாறியிருப்பது தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தங்கத்தை பெற்றுச் செல்வதற்காக பெங்களூரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சென்னை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரையும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

x