கழிவறைக்குள் இளம்பெண்ணை மறைமுகமாக செல்போனில் வீடியோ எடுத்த பெயிண்டர் கைது


சென்னை: சென்னை பாண்டிபஜாரில், கழிவறைக்குள் இளம்பெண்ணை மறைமுகமாக செல்போனில் வீடியோ எடுத்த பெயிண்டரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வடபழனியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் பாண்டிபஜாரில் உள்ள பேன்சி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் மதியம் இயற்கை உபாதை கழிப்பதற்காக பெண் ஊழியர்கள் பயன்படுத்தும் கழிவறைக்குள் சென்றார். அப்போது, கழிவறை ஜன்னலின் மறைவான இடத்தில் செல்போன் ஒன்று இருந்ததை கண்ட அவர், அதனை எடுத்து பார்த்தார். அப்போது, அந்த செல்போனின் கேமராக ஆன் செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த செல்போனுடன் வெளியே ஓடி வந்தார். அப்போது, அங்கிருந்த மர்மநபர், அந்த இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு, செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, அந்த இளம்பெண், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கழிவறைக்குள் இளம்பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்தது தி.நகரை சேர்ந்த மணிகண்டன் (33) என்பதும், பாண்டிபஜாரில் உள்ள ஒரு கடைக்கு பெயின்ட் அடிக்கும் வேலைக்கு வந்த போது, இச்செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டனை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

x