அரசுப் பேருந்து மோதி கணவர் கண்முன்னே மனைவி, குழந்தை பலி: சென்னை அருகே பரிதாபம்


கானத்தூர்: சென்னை அருகே அரசுப்பேருந்து மோதி கணவனின் கண் முன்னே மனைவி மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கானத்தூர் கலைஞர் தெருவைச் சேர்ந்தவர் முதாசர் அகமது. இவர், தனது மனைவி பெனாசீர் (30), மகள்கள் அசினா அகமது (1) அயாதல் (3) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு நீலாங்கரையிலிருந்து கானத்துர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கானத்தூர் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த சினிமா கேரவன் வாகனத்துக்கு வழிவிடுவதற்காக இடதுபுறம் முதாசர் ஒதுங்கிய போது பின்புறம் புதுச்சேரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவரின் இருசக்கர வாகனத்தில் மோதியது.

இதில் பெனாசீர் மற்றும் ஒரு வயது குழந்தை அசினா அகமது இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதாசர் அகமதுவும் அவரது இன்னொரு மகளான அயாதலும் காயமின்றி தப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், அரசுப் பேருந்து ஓட்டுநரான புதுச்சேரியைச் சேர்ந்த குமார் (50) என்பவரை கைது செய்தனர் .

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டு அந்தப் பகுதிக்கு திரண்டு வந்த அகமதுவின் உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த கானத்தூர் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையடுத்து அவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். ஒரே குடும்பத்தைச் சார்ந்த தாயும், மகளும் சாலை விபத்தில் பலியான சம்பவம் கானத்துர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

x