பத்திர பதிவு இணை பதிவாளர் உள்ளிட்ட 8 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு: ரூ.1.80 லட்சம் பறிமுதல் @ விழுப்புரம்


விழுப்புரம் திருவிக சாலையில் இயங்கும் பத்திரப் பதிவு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார்

விழுப்புரம்/கடலூர்: விழுப்புரத்தில் பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடத்திய லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.1.80லட்சம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக இணைப் பதிவாளர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் திருவிக சாலையில் செயல்பட்டு வரும் பத்திரப் பதிவு இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் தினமும் சுமார் 50 பத்திரப் பதிவுகள் நடைபெறும். இங்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புடிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவுசோதனையில் ஈடுபட்டனர். அப்போது,கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, இணைப் பதிவாளர் தையல் நாயகி உட்பட 8 பேர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இணைப் பதிவாளர் தையல் நாயகிக்கு சொந்தமாக, நெய்வேலி அருகேயேள்ள வடக்குத்து ஊராட்சி அசோக் நகரில் உள்ள வீட்டில் நேற்றுகாலை, கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தையல்நாயகியின் கணவர் கிள்ளிவளவன், புதுவையில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.